குழந்தைகளின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009

(01.04.2010  முதல்  நடைமுறைக்கு  வந்துள்ளது)
-மனித  உரிமைக்  கல்வி  நிறுவனம்

அத்தியாயம் 01
முன்னுரை

1.தலைப்பு

1.  இச்சட்டம்  “குழந்தைகளின்  இலவச  கட்டாயக்  கல்வி  உரிமைச்  சட்டம்  2009  என்று  அழைக்கப்படும்.

2.   இந்தச்  சட்டம்  ஜம்மு  காஸ்மீர்  மாநிலம்  தவிர்த்து  இந்தியா  முழுவதற்கும்  பொருந்தும்.

3.  மத்திய  அரசு  அதன்  அதிகாரப்பூர்வ  அரசிதழில்  வெளியிட்ட  நாளிலிருந்து  நடைமுறைக்கு  வரும்.

2.  சொற்பொருள்  விளக்கம்

1. “அரசு”   என்பது

மத்திய,  மாநில  அரசுகளால்  நிறுவப்பட்ட / சொந்தமான/ கட்டுப்பாட்டிற்கு  உட்படும்  பள்ளிகள்  இச்சட்ட  வரையறைக்குள்  அடங்கும்.  இந்த  வரையறை  யூனியன்  பிரதேசத்திற்கும்  பொருந்தும்.

2.  இச்சட்டத்தில்  தரப்பட்டிருக்கும்  “தலைக்  கட்டணம்”  என்ற  சொல்  பள்ளியில்  வசூலிக்கப்படும்  நன்கொடை,  கூடுதல்  கட்டணம்  செலுத்துதல்  ஆகியவற்றைக்  குறிக்கும்.

3.  “குழந்தை”  என்ற  சொல்  6  முதல்  14  வயது  வரை  இருபால்  குழந்தையைக்  குறிக்கும்.


4.  ”ஒதுக்கப்பட்ட  பிரிவை  சார்ந்த  குழந்தை” - தாழ்த்தப்பட்டோர்,  பழங்குடியினர்,  சமூக  ரீதியாக  பிற்படுத்தப்பட்டோர்  அல்லது,  அரசாங்கத்தால்  அதிகாரப்பூர்வமாக  வரையறுக்கப்பட்ட   சமூகம்,  கலாச்சாரம்,  பொருளாதாரம்,  நிலப்பரப்பு,  மொழி,  பாலினம்  எனும்  அடிப்படைகளில்  பாகுபடுத்தப்பட்ட  பிரிவைச்   சார்ந்த  குழந்தைகள்.

5.  “நலிந்த  பிரிவைச்  சார்ந்த  குழந்தை”  அரசால்  வரையறுக்கப்பட்ட  வறுமைக்  கோட்டிற்கு  கீழ்  உள்ள  குடும்பங்களைச்  சார்ந்த  குழந்தைகள்.

6.  “தொடக்கக்கல்வி” - முதல்  வகுப்பிலிருந்து  எட்டாம்  வகுப்பு  வரையிலான  கல்வி.

7.  “பாதுகாவலர்” - குழந்தையைத்  தன்  பொறுப்பில்  வைத்து  வளர்க்கும்  ஒருவர்,  அல்லது  நீதிமன்றத்தாலோ அல்லது  சட்டப்பூர்வமாகவோ  பாதுகாவலர்  என்று  அறிவிக்கப்பட்டவர்.

8.  ”உள்ளாட்சி  அமைப்பு” - மாநகராட்சி  அல்லது  நகராட்சி  அல்லது  மாவட்ட  ஊராட்சி  ஒன்றியம்  அல்லது  நகர  ஊராட்சி  அல்லது  கிராம  ஊராட்சி.

9.  “தேசிய  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையம்” - குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையங்கள்  சட்டம்  2005  பிரிவு  3ன்  கீழ்  அமைக்கப்பட்ட  தேசிய  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையத்தைக்  குறிக்கும்.

10.  “பள்ளி”  என்பது  தொடக்கக்  கல்வியை  வழங்குகிற  அங்கீகரிக்கப்பட்ட  பள்ளி  என்று  பொருள்படும்  -  அது  பின்வரும்  பள்ளிகளை  உள்ளடக்கியதாகும்.

அ.  அரசு  அல்லது  உள்ளாட்சி  நிர்வாகத்தால்  நிறுவப்பட்டு,  சொந்தமாக  உள்ள,  அவைகளின்  நேரடி  கட்டுப்பாட்டிற்குள்  செயல்படுகின்ற  பள்ளிகள்;

ஆ.  அரசு  அல்லது  ஊராட்சி  நிர்வாகத்திடமிருந்து  நிதியுதவிப்  பெறும்  தனியார்ப்  பள்ளிகள்.

இ.  தனித்து  வகுத்துரைக்கப்பட்ட  சிறப்புப்  பள்ளிகள்  (கேந்திய  வித்யாலயா,  நவோதயா  வித்யாலயா,  சைனிக்  பள்ளி)

ஈ.  அரசு  அல்லது  உள்ளாட்சி  நிர்வாகத்திடமிருந்து  நிதியுதவிப்  பெறாத  பள்ளிகள்.

11.  “மாணவர்  பள்ளியில்  சேர்க்கும்  முறை”  குழந்தைகளைப்  பள்ளியில்  சேர்க்கின்ற  போது  மேற்கொள்ளப்படும்  தேர்வு  முறை.

12.  “மாநில  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையம்”  என்பது  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையங்கள் - சட்டம்  2005ன்  கீழ்  அமைக்கப்படுகின்ற  ஆணையம்.

அத்தியாயம்  -  02

இலவச  கட்டாயக்  கல்வி  உரிமை

3.  குழந்தைகளின்  இலவச  கட்டாயக்  கல்வி  உரிமை

1.  6  முதல்  14  வயது  வரை  உள்ள  ஒவ்வொரு  குழந்தைக்கும்  ஒரு  அண்டைப்  பள்ளியில்  தொடக்கக்  கல்வி  முடியும்  வரை  இலவசமாக,  கட்டாயமாகக்  கல்வி  பெறுவதற்கு  உரிமை  உண்டு.

2.  இப்பள்ளியில்  படிக்கும்  குழந்தைகள்  கட்டணங்கள்  செலுத்தவோ  செலவுகள்  செய்யவோ  வேண்டியதில்லை.

மாற்றுத்  திறனுடைய  குழந்தைகளுக்கு  இலவச  கட்டாய  தொடக்கக்  கல்வி  பெறுகிற  உரிமை  உண்டு.

4.  பள்ளிச்  சேர்க்கை  இல்லாத  அல்லது  தொடக்கக்  கல்வியை  முடிக்காத  குழந்தைகளுக்கான  சிறப்பு  விதிகள்

*.  6  வயதுக்கு  மேற்பட்ட  ஒரு  குழ்ந்தை  பள்ளியில்  சேர்க்கப்படவில்லை  என்றால்

*.  சேர்க்கப்பட்டு  தொடக்கக்  கல்வியை  முடிக்க  இயலவில்லையென்றால்   அப்போது  உள்ள  வயதிற்கு  பொருத்தமான  வகுப்பில்  சேர்க்க   வேண்டும்.

*.  இம்மாதிரியான  குழந்தைகள்  ஏனைய  குழந்தைகளுக்கு  இணையான  அறிவைப்  பெறும்  வகையில்  சிறப்புப்  பயிற்சியை  அளிக்க  வேண்டும்.

*.  14  வயதிற்கு  பிறகும்  கூட  தொடக்கக்  கல்வியை  முடிக்கா  நிலையில்  இவர்களுக்கும்  இலவசக்  கல்வி  பெறும்  உரிமை  உண்டு.

5.  பள்ளியை  மாற்றிக்  கொள்ளும்  உரிமை

ஒரு  குறிப்பிட்ட  பள்ளியில்  படிக்கும்  குழந்தைக்கு  அந்தப்  பள்ளியில்  படிப்பை  தொடர  முடியாத  சூழல்  ஏற்பட்டால்  பள்ளியை  மாற்றிக்  கொள்வதற்கான  உரிமை  உண்டு.  தொடக்கக்  கல்வியை  முடிப்பதற்கு  வழியில்லாத,  ஒரு  பள்ளியில்   பயிலும்  ஒரு  குழந்தைக்குத்  தனது  தொடக்கக்  கல்வியை  முடிப்பதற்காக  வேறு  பள்ளிக்கு  மாற்றக்  கோரும்  உரிமை  உண்டு.  இவ்வாய்ப்பு  அரசு  மற்றும்  அரசுதவி  பெறும்  பள்ளிகளுக்கு  மட்டுமே  பொருந்தும்.

2.  தொடக்கக்  கல்வியை  முடிக்க  ஒரு  மாநிலத்திற்கு  உள்ளேயோ  அல்லது  மாநிலத்திற்கு  வெளியேயோ  வேறொரு  பள்ளிக்கு  மாற வேண்டிய  அவசியம்  வருமானால்  மாற்றுமாறு  கோர  உரிமை  உண்டு.  இவ்வாய்ப்பு  அரசு  மற்றும்  அரசுதவி  பெறும்  பள்ளிகளுக்கு  மட்டுமே  பொருந்தும்.

3.  வேறொரு  பள்ளியில்  சேர்வதற்கு  பள்ளியின்  தலைமை  ஆசிரியர்  அல்லது  பொறுப்பாளர்  உடனடியாக  மாற்றுச்  சான்றிதழ்  வழங்க  வேண்டும்.

மாற்றுச்  சான்றிதழ்  வழங்க  தாமதப்படுத்தும்  பள்ளியின்  தலைமையாசிரியர்  அல்லது  பொறுப்பாளர்  மீது  பணி  விதிகளின்  கீழ்  ஒழுங்கு  நடவடிக்கை  எடுக்கப்படும்.

அத்தியாயம் - 03

அரசு,  உள்ளாட்சி  அமைப்புகள்,  பெற்றோர்  கடமைகள்

6.  அரசும்  மற்றும்  உள்ளாட்சி  அமைப்புகளும்  அண்டைப்  பள்ளிகள்  இல்லாதிருக்குமானால்  இச்சட்டம்  சட்ட  நடைமுறைக்கு  வந்த  மூன்று  ஆண்டுகளுக்குள்  நிறுவிட  வேண்டும்.

7.  நிதி  மற்றும்  இதர  பொறுப்புகள்

1.  இந்தச்  சட்டத்தின்  விதிகளைச்  செயல்படுத்தவும்  நிதி  வழங்கவும்  மத்திய  மற்றும்  மத்திய  அரசுக்குப்  பொதுப்  பொறுப்பு  உண்டு.

2.  இச்சட்ட  விதிகளைச்  செயலாக்குதற்குரிய  முதலீடு  மற்றும்  செலவுகள்  குறித்த  மதிப்பீட்டை  மத்திய  அரசு  தயாரிக்க  வேண்டும்.

3.  மத்திய  அரசு  மாநில  அரசுகளின்  செலவுகளுக்கான   விகிதாச்சாரத்தை  வருவாய்  நிதி  ஒதுக்கீடுகளாக  வழங்க வேண்டும்.

4.  மாநில  அரசுகளுக்குக்  கூடுதல்நிதி  வழங்கும்  வகையில்  நிதி  ஆணையத்தைக்  கேட்டுக்  கொள்ள  குடியரசுத்  தலைவரைக்  கேட்டுக்  கொள்ளலாம்.

5.  மத்திய  அரசு  தரும்  நிதியினை  வைத்துக்  கொண்டு  மாநில  அரசு  இச்சட்ட  விதிகளை  முறையாகச்  செயல்படுத்த   நிதி  வழங்க  வேண்டும்.

6.  மத்திய  அரசாங்கம்  மேற்கொள்ளும்  நடவடிக்கைகளை,

அ.  அதிகாரப்பூர்வ  கல்வி  அமைப்பின்  உதவியோடு  தேசிய  பாடத்திட்டத்திற்கான  ஒரு  சட்ட  வரைமுறையை  உருவாக்கும்.

ஆ.  ஆசிரியர்கள்  பயிற்சிக்கான  தர  நிர்ணயங்களை  வகுக்கும்.

இ.  புதிய  கண்ணோட்டங்கள்,  ஆய்வுகள்,  திட்டம்  மற்றும்  திறன்  வளர்ப்பு  ஆகியவற்றிற்குத்  தொழில்  நுட்ப  ஒத்துழைப்பும்  ஆதாரங்களையும்  மாநில  அரசுகளுக்கு  வழங்கும்.

8.  அரசின்  கடமைகள்

அ.  ஒவ்வொரு  குழந்தைக்கும்  இலவச,  கட்டாயத்  தொடக்கக்  கல்வியை  வழங்குதல்.

அரசு  யாருடைய  செலவை  ஈடுகட்டாது.

அரசு,  உள்ளாட்சி  அமைப்பு - இவைகளால்  நிறுவப்படாத,  கட்டுப்பாட்டிற்குள் வராத,  நிதியுதவிப்  பெறாத  பள்ளிகளில்  சேர்க்கப்பட்டிருக்கும்  குழந்தைக்கு  அந்தக்  குழந்தையின்  பெற்றோர்  அல்லது  பாதுகாப்பாளருக்குத்  தொடக்கக்  கல்வி  அளிப்பதில்  ஏற்படும்  செலவை  ஈடுகட்டுமாறு  கோருவதற்கு  உரிமை  இல்லை.

விளக்கம் - “கட்டாயக்  கல்வி  என்ற  சொல்லின்  பொருள்”  பின்வருமாறு :

அ.  அரசு  6 முதல்  14  வயது  வரை  உள்ள  ஒவ்வொரு  குழந்தைக்கும்  இலவச,  கட்டாயத்  தொடக்கக்  கல்வி  வழங்குதல்.

ஆ. அரசு  ஒவ்வொரு  குழந்தையும்  தொடக்கக்  கல்வி  பெறும்  வகையில்  அண்டைப்பள்ளி  ஒன்றை  உருவாக்குவதை  உறுதிச்  செய்ய  வேண்டும்.

இ.  நலிந்த  மற்றும்  ஒதுக்கப்பட்ட  பிரிவைச்  சார்ந்த  குழந்தைகளுக்கு  எவ்வித  பாகுபாடு  காட்டப்படாமல்  தொடக்கக்கல்வியை  முடிக்க  அரசு  உறுதியான  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்.

ஈ.  பள்ளிக்  கட்டடம்,  ஆசிரியர்கள்  மற்றும்  கற்றல்  கருவிகள்  உள்ளிட்ட  உட்கட்டுமானங்களை  அரசு  வழங்க  வேண்டும்.

உ.  பள்ளிகளில்  சிறப்புப்  பயிற்சிக்கான  வசதிகளை  வழங்க  வேண்டும்.

ஊ. ஒவ்வொரு  குழந்தையும்  பள்ளியில்  சேர்க்கப்பட்டு,  தொடர்ந்து  வருகை  தந்து  தொடக்கக்  கல்வியை  முடிப்பதை  கண்காணிக்க  வேண்டும்.

எ.  நல்ல,  தரமான  தொடக்கக்  கல்வி  கிடைப்பதை  அட்டவணையில் குறிப்பட்டுள்ளபடி  நடைமுறைப்படுத்த  வேண்டும்.

ஏ,  பாடத்திட்டம்  தயாரித்தல்,  பாட  வகுப்புகளை  நிர்ணயித்தல்  உரிய  காலத்தில்  நடத்தப்படலை   உறுதிப்பட  வேண்டும்.

ஐ.  ஆசிரியர்களுக்கான  பயிற்சி  வசதிகளை  வழங்க  வேண்டும்.

9.  உள்ளாட்சி  அமைப்பின்  கடமைகள்

ஒவ்வொரு  குழந்தைக்கும்  இலவச,  கட்டாய  கல்வியை  வழங்க  வேண்டும்.

அ.  அரசு,  உள்ளாட்சி  அமைப்பு - இவைகளால்  நிறுவப்படாத,  கட்டுப்பாட்டிற்குள்  வராத,  நிதியுதவிப்  பெறாத  பள்ளிகளில்  சேர்க்கப்பட்டிருக்கும்  குழந்தைக்கு  அந்தக்  குழந்தையின்  பெற்றோர்  அல்லது  பாதுகாப்பாளருக்குத்  தொடக்கக்  கல்வி  அளிப்பதில்  ஏற்படும்  செலவை  ஈடுகட்டுமாறு  கோருவதற்கு  உரிமை  இல்லை.

ஆ.  அரசு  ஒவ்வொரு  குழந்தையும்  தொடக்கக்கல்வி  பெறும்  வகையில்  அண்டைப்பள்ளி  ஒன்றை  உருவாக்குவதை  உறுதிச்  செய்ய   வேண்டும்.

இ.  நலிந்த  மற்றும்  ஒதுக்கப்பட்ட  பிரிவைச்  சார்ந்த  குழந்தைகள்  எவ்வித  பாகுபாடு  காட்டப்படாமல்  தொடக்கக்  கல்வியை  முடிக்க  அரசு  உறுதியான  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்.

ஈ.  ஊராட்சி  அமைப்பின்  அதிகார  எல்லைக்குட்பட்ட  பகுதியில்,  வசிக்கும்  14 வயது  வரை  உள்ள  குழந்தைகள்  பற்றிய  விபரங்களைச்  சேகரித்து  பராமரிக்க  வேண்டும்.

உ.  ஒவ்வொரு  குழந்தையும்  பள்ளியில்  சேர்க்கப்பட்டு,  தொடர்ந்து  வருகை  தந்து  தொடக்கக்  கல்வியை  முடிப்பதைக்  கண்காணிக்க  வேண்டும்.

ஊ.  பள்ளிக்  கட்டடம்,  ஆசிரியர்கள்  மற்றும்  கற்றல்  கருவிகள்  உள்ளிட்ட  உட்கட்டுமானங்களை  அரசு  வழங்க  வேண்டும்.

எ.  சிறப்புப்  பயிற்சி  வசதிகளை  வழங்க  வேண்டும்.

ஏ.  நல்ல,  தரமான  தொடக்கக்  கல்வி  கிடைப்பதை  அட்டவணையில்  குறிப்பிட்டுள்ளபடி   நடைமுறைப்படுத்த  வேண்டும்.

ஐ.  பாடத்திட்டம்  தயாரித்தல்,  பாட  வகுப்புகளை  நிர்ணயித்தல்  உரிய  காலத்தில்  நடத்தப்படலை  உறுதிப்படுத்த  வேண்டும்.

ஒ.  ஆசிரியர்களுக்கான  பயிற்சி  வசதிகளை  வழங்க  வேண்டும்.

ஓ.  புலம்  பெயர்ந்த  குடும்பங்களின்  குழந்தைகள்  பள்ளியில்  சேர்க்கப்படுவதை  உறுதிப்படுத்த  வேண்டும்.

ஒள.  தனது  அதிகார  எல்லைக்கு  உட்பட்ட  பகுதியில்  பள்ளிகளின்  செயல்பாட்டைக்  கண்காணிக்க  வேண்டும்.

அ. கல்வி  ஆண்டைத்  தீர்மானிப்பது  இவ்வமைப்பின்  கடமையாகும்.

10.  பெற்றோர்  மற்றும்  பாதுகாவலரின்  கடமைகள்

தங்கள்  குழந்தை  அல்லது  தங்கள்  பொறுப்பில்  உள்ள  குழந்தைகளை,  அவரவர்தம்  நிலைமைக்கேற்ப,  அண்டைப்பள்ளி  ஒன்றில்  தொடக்கக்கல்வி  பெற  பள்ளியில்  சேர்ப்பதும்  அல்லது  சேர்க்க  வைப்பதும்  பெற்றோர்  அல்லது  பாதுகாவலரின்  கடமையாகும்.

11.  பள்ளிக்கு  முந்தைய  கல்வியை  வழங்குவதில்  அரசின்  பொறுப்பு

3வயதுக்கு  மேற்பட்ட  குழந்தைகளைத்  தொடக்கக்  கல்வி  பெற  தயார்ப்படுத்துவதற்காகவும்  6 வயது  நிறைவடையும்  வரையில்  அனைத்துக்  குழந்தைகளுக்கும்  தொடக்க  நிலை  குழந்தைப்  பருவ  கவனிப்பு  மற்றும்  கல்வி  கிடைக்கச்  செய்வதற்காகவும்  அரசு  இக்குழந்தைகளுக்கு  இலவசமாகப்  பள்ளிக்கு  முந்தைய  கல்வி  வழங்குவதற்குத்  தேவையான  வகை  செய்ய  வேண்டும்.

அத்தியாயம் - 04

பள்ளிகள்  மற்றும்  ஆசிரியர்களின்  பொறுப்புகள்

12.  இலவச  கட்டாயக்  கல்வி  வழங்குவதில்  பள்ளியின்  பொறுப்புகள்

1.  இந்தச்சட்டத்தின்  நோக்கங்கள்  நிறைவுற  ஒரு  பள்ளி  பின்வருமாறு  செயல்பட  வேண்டும்.

அ.  அரசு  மற்றும்  அரசுதவிப்  பெறும்  பள்ளிகளில்  சேர்க்கப்படும்  அனைத்து  குழந்தைகளுக்கும்  இலவச,  கட்டாயக்  கல்வி  வழங்க  வேண்டும்.

ஆ.  அரசுதவிப்  பெறா  தனியார்ப்  பள்ளிகள்  தனது  வருடாந்திர  செலவு  ஆகியவற்றிற்கு  உட்பட்டு,  குறைந்தது  25   விழுக்காடு  அளவிலான  விகிதாசாரப்படி  சேர்க்கப்பட்ட  குழந்தைகளுக்கு  இலவச  கட்டாயக்  கல்வி  வழங்க  வேண்டும்.

இ.  அரசுதவிப்  பெறா  தனியார்ப்  பள்ளிகள்  மற்றும்  தனித்து  வகுத்துரைக்கப்பட்ட  பள்ளிகளில்  முதல்  வகுப்பில்  குறைந்தது  25  விழுக்காடு  குழந்தைகளை  அண்டைப்  பகுதிகளிலுள்ள  நலிந்த  பிரிவுகள்  மற்றும்  ஒதுக்கப்பட்ட  பிரிவ்களைச்  சேர்ந்த  குழந்தைகளைக்  கண்டறிந்து  அவர்களுக்குத்  தொடக்கக்  கல்வி  முடியும்  வரையில்  இலவச,  கட்டாயக்  கல்வியை  வழங்க  வேண்டும்.

பிரிவு  2  விதி (n) ல்  குறிக்கப்பட்டுள்ள  ஒரு  பள்ளி,  பள்ளிக்கு  முந்தைய  கல்விக்காகக்  குழந்தைகளைச்  சேர்த்துக்  கொள்வது  என்பதற்கும்  பிரிவு (a),  (உ)  ஆகிய  விதிகள்  பொருந்தும்.

(2)  இலவச,  சட்டாயக்  கல்வி  வழங்குகிற  அரசுதவிப்  பெறா  தனியார்ப்  பள்ளிகள்,  அரசாங்கத்தால்  ஒரு  குழந்தைக்கு  இவ்வளவு  என  நிர்ணயிக்கப்பட்டுள்ள  செலவுத்  தொகையை  அல்லது  குழந்தையிடமிருந்து  வசூலிக்கப்பட்ட  உண்மைத்  தொகையை,  இவற்றில்  எது  குறைவோ  அந்தத்  தொகையை,  வகுத்தரைக்கப்பட்டுள்ள  வழிமுறைகளின்படி  ஈடு  செய்யக்  கோர  முடியும்.

இவ்வாறு  ஈடு  செய்யக்கொரும்  தொகையானது,  அரசு  மற்றும்  அரசுதவிப்  பெறும்  பள்ளியில்  வரையறுக்கப்பட்டுள்ளபடி  ஒரு  குழந்தைக்கு  இவ்வளவு  என  அரசாங்கத்தால்  நிர்ணயிக்கப்பட்ட  தொகைக்கு  மேல்  இருக்கக்  கூடாது.

இலவசமாகவோ  அல்லது  சலுகை  விலையிலோ  நிலம்,  கட்டம்,  கல்விச்  சாதனங்கள்  அல்லது  இதர  வசதிகளைப்  பெற்றுக்  கொண்டதற்காகக்  குறிப்பிட்ட  எண்ணிக்கையிலான  குழந்தைகளுக்கு  இலவசக்  கல்வி  வழங்கியாக  வேண்டிய  அளவு  வரையிலான  தொகையை  (அரசாங்கத்திடமிருந்து)  ஈடு  செய்யக்கோர  முடியாது.

(3)  ஒவ்வொரு  பள்ளியும்  உரிய  அரசு  அல்லது  உள்ளாட்சி  அமைப்பு   கோருகிற  மேற்கண்ட  தகவல்களைத்  தரவேண்டும்.

13.  பள்ளி  சேர்க்கைக்குக்  கல்வி  கட்டணம்,  தேர்வுமுறை  கூடாது

1. எந்தப்  பள்ளியும்  ஒரு  குழந்தையைச்  சேர்க்கும்  பொழுது  அதன்  பெற்றோர்  அல்லது  பாதுகாப்பாளரிடமிருந்து  எந்தவொரு  கல்விக்  கட்டணமும்  வசூலிக்கக்கூடாது.  குழந்தையை  எந்தவொரு  முன்  தேர்வு  நடைமுறைக்கும்  உட்படுத்தக்  கூடாது.

2.  எந்தவொரு  பள்ளியோ  அல்லது  நபரோ...

அ.  கல்விக்  கட்டணம்  வசூலித்தால்  வசூலிக்கப்பட்ட  கல்விக்  கட்டணத்தைப்  போல  10 மடங்கு  வரை  அபராதம்  தண்டனையாக  விதிக்கப்படும்.

ஆ.  குழந்தையைத்  தேர்வு  நடைமுறைக்கு  உட்படுத்தினால்  முதல்  தடவையாக  விதியை  மீறும்பொழுது  இருபத்து  ஐந்தாயிரம்  ரூபாய்  வரையில் அபராதம்  தண்டனையாக  விதிக்கப்படும்.  மீண்டும்  மீண்டும்  மீறும்பொழுது  ஒவ்வொரு   முறையும்  ஐம்பதாயிரம்  ரூபாய்  வரையில்  அபராதம்  விதிக்கப்படும்.

14.  பள்ளிச்   சேர்க்கைக்கான  வயது  சான்று

1.  தொடக்கக்  கல்விக்கு  குழந்தையைச்  சேர்ப்பதற்கு,  அந்த  குழந்தையின்  வயது  1986 ஆம்  ஆண்டின்  பிறப்பு  இறப்பு  மற்றும்  திருமணப்  பதிவுச்சட்ட  விதிகளின்கீழ்  வழங்கப்படும்  பிறப்புச்  சான்றிதழின்  அடிப்படையில்  அல்லது  அதுபோன்ற  இதர  ஆவணங்களின்  அடிப்படையில்  முடிவு  செய்யப்பட  வேண்டும்.

2.  வயது  சான்றிதழ்  இல்லாத  காரணத்திற்காக  எந்தவொரு  குழந்தைக்கும்  பள்ளிச்  சேர்க்கை  அனுமதி  மறுக்கப்படக்  கூடாது.

15.  பள்ளியில்  சேர்க்க  மறுத்தல்  கூடாது

கல்வி  ஆண்டு  தொடங்கும் போது  அல்லது  தீர்மானிக்கப்படும்  கால  வரையறைக்குள்  ஒரு  குழந்தைப்  பள்ளியில்  சேர்க்கப்படவேண்டும்.

நீட்டிக்கப்பட்ட  காலத்தை  ஒட்டி  பள்ளியில்  சேர்ப்பதற்கு  விண்ணப்பிக்கப்  படுமானால்  எந்தவொரு  குழந்தைக்கும்  சேர்க்கை  அனுமதி  மறுக்கப்பட  மாட்டாது.

மேலும்  நீட்டிக்கப்பட்ட  காலத்திற்குப்  பின்  சேர்க்கப்படும்  எந்தவொரு  குழந்தையும்,  அரசால்  வகுத்துரைக்கப்படும்  முறையில்  கல்வியை  முடிக்கலாம்.

16.  ஒரே  வகுப்பில்  இருக்க  வைத்தல்  மற்றும்  வெளியேற்றுவதற்குத்  தடை

ஒரு  பள்ளியில்  சேர்க்கப்படும்  எந்தவொரு  குழந்தையும்  தொடக்கக் கல்வி  முடியும்  வரையில்  தோல்வி  என்ற  பெயரில்  எந்தவொரு  வகுப்பிலும்  தொடர்ந்து  இருக்க  வைக்கப்படக்கூடாது;  மேலும்  பள்ளியிலிருந்து  வெளியேற்றவும்  கூடாது.

17.  குழந்தைக்கு  உடல்  ரீதியான  தண்டனை  அல்லது  மன  ரீதியான  துன்புறுத்தல்  ஏற்படுத்த  தடை

1.  எந்தவொரு  குழந்தையும்  உடல்  ரீதியான  தண்டனைக்கோ  மன  ரீதியான  துன்புறுத்தலுக்கோ  உள்ளாக்கக்கூடாது.

2.  மீறுவோர்  மீது  பணி  விதிகளின்படி  ஒழுங்கு  நடவடிகை  எடுக்கப்படும்.

18.  அங்கீகாரச்  சான்றிதழ்  பெறாமல்  எந்தவொரு  பள்ளியும்  நிறுவப்படக்கூடாது

1.  அரசு  அல்லது  உள்ளாட்சி  அமைப்புகளால்  நிறுவப்பட்டு  உடமையாக்கப்பட்டுக்  கட்டுப்படுத்தப்படுகிற  பள்ளியில்லா  வேறு  எந்தப்  பள்ளியும்,  இந்தச்  சட்டம்  நடைமுறைக்கு  வரத்  தொடங்கிய  பிறகு  உரிய  முறையில்  விண்ணப்பித்து  உரிய  அதிகார  அமைப்பிடமிருந்து  அங்கீகாரச்  சான்றிதழ்  பெறாமல்  நிறுவப்படவோ  செயல்படவோ  கூடாது.

2.  கல்வித்துறை  அதிகார  அமைப்பு,  வரையறைக்குட்பட்ட  முறையில்,  அதற்குரிய  காலத்திற்குள்,  அதற்குரிய  நிபந்தனைகளுக்கு  உட்பட்டு  அங்கீகாரச்  சான்றிதழ்  வழங்க  வேண்டும்.

வரையறுக்கப்பட்டுள்ள  நடைமுறைகள்  மற்றும்  தரங்களை  நிறைவு  செய்யாத  பள்ளிக்கு  அங்கீகாரச்  சான்றிதழ்  வழங்கப்பட மாட்டாது.

3.  பள்ளி  அங்கீகாரத்திற்கான  நிபந்தனைகள்  மீறப்படுமானால்  உரிய  அதிகார  நிர்வாகம்  அங்கீகாரத்தை  எழுத்துப்பூர்வ  ஆணைப்படி  விலக்கிக்  கொள்ளும்.

அங்கீகாரம்  மறுக்கப்படும்  பள்ளியில்  படிக்கும்  குழந்தைகள்  அடுத்து  எந்த  அண்டைப்  பள்ளியில்  சேர்க்கப்படுவார்கள்  என்பதற்கான  ஆணைகளும்  அந்த  ஆணையில்  சேர்க்கப்பட  வேண்டும்.

அங்கீகாரம்  கேள்விக்குள்ளாகும்  பள்ளிக்குச்  சுய  விளக்கம்  தர  வாய்ப்பளிக்காமல்  அதன்  அங்கீகாரத்தை  விலக்கிக்  கொள்ளக்  கூடாது.

4.  அங்கீகாரம்  விலக்கிக்  கொள்ளப்படும்  தேதியிலிருந்து  பள்ளி  செயற்படக்  கூடாது.

5.  அங்கீகாரச்  சான்று  பெறாமலோ  அங்கீகாரம்  விலக்கிக்  கொள்ளப்பட  பிறகோ  பள்ளியைத்  தொடர்ந்து  நடத்துகிற  எந்தவொரு  நபர்  மீதும்  நடத்துகிற  எந்தவொரு  நபருக்கும்  ஒரு  இலட்சம் ரூபாய்  வரையில்  தண்டனை  விதிக்கலாம்.  இத்தண்டனைக்குப்  பிறகும்  தொடர்ந்து  பள்ளி  நடத்துவோர்  தொடரும்  நிலையில்  நாளொன்றுக்குப்  பத்தாயிரம்  ரூபாய்  வரை  தண்டனைத் தொகை  விதிக்கப்படும்.

19.  பள்ளிக்கான  விதிகளும்  தரங்களும்

1.  அட்டவணையில்  குறிக்கப்பட்டுள்ள  விதிகள்  மற்றும்  தரங்களை  நிறைவு  செய்யா  எப்பள்ளியும்  நிறுவப்பெறலுகு  உரிமை  இல்லை.  அப்பள்ளிக்கு  அங்கீகாரம்  அளிக்கப்படமாட்டாது.

2.  இச்சட்டம்  நடைமுறைக்கு  வர  தொடங்குவதற்கு  முன்பே  அட்டவணையில்  கூறப்பட்டுள்ளபடி  விதிகள்  மற்றும்  தரங்களை  நிறைவு  செய்யாமல்  ஒரு  பள்ளி  நிறுவப்பட்டிருக்குமானால்,  அந்தப்  பள்ளி  தனது  சொந்தச்  செலவில்  மூன்றாண்டுகளுக்குள்  விதிகளையும்  தரங்களையும்  நிறைவு  செய்வதற்கான  நடவடிக்கைகளை  மேற்கொள்ள  வேண்டும்.

3.  இந்த  விதிகள்  மற்றும்  தரங்களை  நிறைவு  செய்ய  தவறும்  பள்ளியின்  அங்கீகாரம்  விலக்கிக்  கொள்ளப்படும்.

4.  அங்கீகாரம்  விலக்கிக்  கொள்ளப்பட்ட  தேதியிலிருந்து  பள்ளி  இயங்க  அனுமதியில்லை.

5.  அங்கீகாரம்  விலக்கிக்  கொள்ளப்பட்ட பிறகு  பள்ளியைத்  தொடர்ந்து  நடத்துகிற  எந்தவொரு  நபரும்,  ஒரு  இலட்சம்  ரூபாய்  வரையில்  தண்டனைத்  தொகைக்கு  உட்படுத்தப்படுவார்.  இந்த  விதி  மீறல்  தொடரும்  நிலையில்,  மீறல்  தொடரும்  நாளொன்றுக்கு  பத்தாயிரம்  ரூபாய்  அபராதம்  விதிக்கப்படும்.

20.  அட்டவணையைத்  திருந்துவதற்கான  அதிகாரம்

மத்திய  அரசாங்கம்,  அறிவிக்கை  மூலமாக,  எந்தவொரு  நடைமுறை  அல்லது  தரங்களைச்  சேர்த்தல்  அல்லது  நீகுதல்  மூலமாக  அட்டவணையில்  திருத்தம்  செய்யலாம்.

21.  பள்ளி  நிர்வாகக்  குழு

1.  உள்ளாட்சி  நிர்வாகத்தின்  தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதிகள்,  குழந்தைகளின்  பெற்றோர்  அல்லது  பாதுகாவலர்  மற்றும்  ஆசிரியர்கள்  கொண்ட  பள்ளி  நிர்வாகக்  குழு  ஒன்றை  அமைக்க  வேண்டும்.

உறுப்பினர்கள்

குழு  உறுப்பினர்களில்  நான்கில்  மூன்று  பகுதியினர்  பெற்றோர்  அல்லது  பாதுகாவலர்களாக  இருக்க  வேண்டும்.

ஒதுக்கப்பட்ட  மற்றும்  வறுமைக்  கோட்டிற்குக்  கீழ்  வாழும்  பிரிவுகளைச்  சார்ந்த  பெற்றோர்  அல்லது  பாதுகாவலர்களுக்கு  அக்குழுவில்  விகிதாச்சார  முறைப்படி பிரதிநிதித்துவம்  அளிக்கப்பட  வேண்டும்.

இக்குழுவின்  உறுப்பினர்களில்  ஐம்பது  விழுக்காட்டினர்  பெண்களாக  இருக்க  வேண்டும்.

(2) பள்ளி  நிர்வாகக்  குழுவின்  பணிகள்

அ.  பள்ளியின்  செயல்பாடுகளிக்  கண்காணித்தல்.
ஆ.  பள்ளி  மேம்பாட்டுத்திட்டம்  தயாரித்தல்,  பரிந்துரைத்தல்
இ.  அரசு  அல்லது  உள்ளாட்சி  அமைப்பு  அல்லது  வேறு  மூலங்களிலிருந்து  கிடைக்கும்  நிதி  ஒதுக்கீடுகள்  பயன்படுத்தப்  படுவதைக்  கண்காணித்தல்  மற்றும்
ஈ.  விதிக்கப்  பெறும்  ஏனைய  பணிகளையும்  செய்தல்.

22.  பள்ளி  மேம்பாட்டுத்  திட்டம்

1.  ஒவ்வொரு  பள்ளி  நிர்வாகக் குழுவும்  பள்ளி  மேம்பாட்டுத்  திட்டம்  ஒன்றைத்  தயாரிக்க  வேண்டும்.

2.  இம்மேம்பாட்டுத்  திட்டமே  உரிய  அரசும்  உள்ளாட்சி  அமைப்பும்  நிதி  ஒதுக்கீடு  செய்வதற்கான  அடிப்படையாக  அமையும்.

23.  ஆசிரியர்கள்  நியமனத்திற்கான  தகுதிகளும்  நிபந்தனைகளும்

1.  மத்திய  அரசின்  அதிகாரப்பூர்வ  அறிக்கையின்படி  அதிகாரம் அளிக்கப்பட  கல்வித்துறை  அமைப்பு  வகுத்துள்ள  குறைந்தபட்ச  தகுதிகள்  உள்ள  எந்த  ஒரு  நபரும்  ஆசிரியராக  நியமிக்கப்படத்தகுதி  உள்ளவராவார்.

2.  ஒரு  மாநிலத்தில்  ஆசிரியர்  பயிற்சி  அளிப்பதற்குப்  போதுமான  நிறுவனங்களும்  குறைந்தபட்ச  தகுதிகள்  கொண்ட  ஆசிரியர்களும்  போதுமான  எண்ணிக்கையில்  இல்லாத  நிலையில்,  மத்திய  அரசாங்கம்  ஆசிரியர்  நியமனத்திற்கான  குறைந்தபட்சத்  தகுதிகளைத்  தளர்த்தலாம்.

குறிப்பிடப்பட்ட  குறைந்தபட்சத்  தகுதிகள்  ஒரு  ஆசிரியருக்கு  இல்லை  என்றால், அவர்  ஐந்தாண்டுகளுக்குள்  குறைந்தபட்சத்  தகுதிகளைப்  பெற  வேண்டும்.

(3) ஆசிரியர்களுக்கு  வழங்கப்படும்  ஊதியம்,  படிகள்  அவரது  பணிமுறைகள்  மற்றும்  பணி  நிபந்தனைகள்  ஏற்கனவே  விதிக்கப்பட  வகையில்  அமையும்.

24.  ஆசிரியர்களின்  கடமைகளும்  குறை  தீர்ப்பும்  ஆசிரியரின்  பணிகள்

அ.  பள்ளிக்குத்  தொடர்ந்தும்  உரிய  நேரப்படியும்  வருதல்.

ஆ.  பாடத்திட்டத்தை  முழுமையாக  நடத்தி  முடித்தல்.

இ.  முழு  பாடத்திட்டத்தையும்  வரையறுக்கப்பட்ட  கால  அளவுக்குள்  முடித்தல்;

ஈ.  ஒவ்வொரு  குழந்தையின்  கற்றல்  திறனையும்  மதிப்பிடுதல்,  தேவைப்படுமானால்  கூடுதல்  பயிற்சி  வழங்கி  ஈடுசெய்தல்;

உ.  பெற்றோர்  மற்றும்  பாதுகாப்பாளர்களுடன்  சந்திப்புக்  கூட்டங்களைத்  தொடர்ச்சியாக  நடத்தி,  குழந்தையின்  தொடர்ச்சியான  வருகை,  கற்றல்  திறன்,  கற்றலில்  ஏற்பட்டுள்ள  முன்னேற்றம்  மற்றும்  இதர  பொருத்தமான  தகவல்களைத்  தெரியவைத்தல்;

ஊ.  வகுக்கப்படும்  இதர  பணிகளையும்  செய்தல்

எ.  பள்ளியில்  வரையறுக்கப்பட்ட  கடமைகளை  ஒரு  ஆசிரியர்  செய்யத்  தவறுவாரானால்  பணிவிதிகளின்  கீழ்  ஒழுங்கு  நடவடிக்கைக்கு  உட்படுத்தப்படுவார்.

அவ்வாசிரியர்  மீது  ஒழுங்கு  நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு  முன்பாக  அவர்  தரப்பு  வாதத்தைக்  கேட்பதற்கும்  வாய்ப்பு  அளிக்க  வேண்டும்.

ஏ.  ஆசிரியருக்கு  குறைகள்  உரிய  முறையில்  தீர்க்க  வழிகாணப்படும்.

25.  மாணவர்  ஆசிரியர்  விகிதம்

1.  இந்த  சட்டம்  நடைமுறைக்கு  வர  தொடங்கிய  6  மாதங்களுக்குள்  அட்டவணையில்  வரையறுக்கப்பட்டுள்ளபடி  ஒவ்வொரு  பள்ளியிலும்  மாணவர் - ஆசிரியர்  விகிதம்  முறையாக  இருப்பதை  அரசு அல்லது  உள்ளாட்சி  அமைப்புகள்  உறுதிப்படுத்த  வேண்டும்.

2.  மாணவர் -  ஆசிரியர்  விகிதத்தைப்  பராமரிக்க  ஒரு  பள்ளியில்  நியமிக்கப்படும்  எந்தவொரு  ஆசிரியரும்  வேறு  பள்ளியிலோ  அல்லது  அலுவலகத்திலோ  பணியாற்றும்படி  செய்யக்கூடாது;  கல்வி  சாரா  வேறு  பணிகளுக்கு  அனுப்பக்கூடாது.

26.  ஆசிரியர்  காலி  பணியிடங்களை  நிரப்புதல்

அரசு  அல்லது  உள்ளாட்சி  அமைப்புகளால்  நேரடியாகவோ  மறைமுகமாகவோ  நிறுவப்பட்டு,  உடமையாக்கப்பட்டு  கட்டுப்பாட்டிலிருக்கிற  அல்லது   நிதி  வழங்கப்படுகிற  ஒரு  பள்ளி  தொடர்பான  நியமன  அதிகாரம்  கொண்ட  அமைப்பு,  அந்தப்பள்ளியில்  காலியாகும்  ஆசிரியர்  பணியிடங்கள்  எண்ணிக்கை  அனுமதிக்கப்பட்ட  மொத்த  ஆசிரியர்  பணியிடங்களின்  எண்ணிக்கை  10  விழுக்காட்டிற்கு  மேல்  சொல்லாமல்  இருப்பதை  உறுதிப்படுத்த  வேண்டும்.

27.  கல்விசாரா  நோக்கங்களுக்கு  ஆசிரியர்களை  அனுப்ப  தடை

மக்கள்தொகை  கணக்கெடுப்பு,  பேரிடர்  நிவாரண  பணிகள்  அல்லது  உள்ளாட்சி   அமைப்புக்கோ  மாநில  சட்டமன்றத்துக்கோ  நாடாளுமன்றத்துக்கோ  நடைபெறும்  தேர்தல்கள்  தொடர்பான  பணிகள்  தவிர  வேறு  கல்வி  சாராத  எந்தப்  பணிக்கும்  எந்த  ஒரு  ஆசிரியரும்  அனுப்ப  மாட்டார்கள்.

28.  ஆசிரியர்களின்  தனிப்பட்ட  பயிற்சி  அளிக்க  தடை

எந்தவொரு  ஆசிரியரும்  தனிப்பயிற்சி  (டியூசன்)  நடத்த அனுமதியில்லை.

அத்தியாயம் - 5

பாடத்திட்டமும்  தொடக்கக்  கல்வியை  முடித்தலும்

29.  பாடத்திட்டம்  மற்றும்  மதிப்பீட்டு  நடைமுறைகள்

1.  தொடக்கக்  கல்விக்கான  பாடத்திட்டத்தையும்  மதிப்பீட்டு  முறையை  உரிய  கல்வித்துறை  அதிகார  அமைப்பு  வகுத்தளிக்கும்.

2.  பாடத்திட்டத்தையும்  மதிப்பிடும்  நடைமுறையையும்  வகுக்கிற  கல்வித்  துறை  அதிகார  அமைப்பு   பின்வரும்  அம்சங்களைக்  கருத்தில்  கொள்ளும்.

3.  அரசியல்  சாசனத்தில்  கூறப்பட்டுள்ள  மதிப்பிடுகளுக்கு  ஒத்திசைந்ததாக  இருத்தல்.

4.  குழந்தையின்  முழு  வளர்ச்சி

5.   குழந்தையின்  அறிவு  மற்றும்  திறனை  வளர்த்தல்

6.  குழந்தைக்கு  இணக்கமான  முறையிலும்,  குழந்தையை  மையப்படுத்திய  முறையிலும்  செயல்வழி  கற்றல்,  கண்டறிதல்  மற்றும்  ஆராய்ந்தறிதல்  ஆகியவற்றை  வளர்த்தல்.

7.  பயிற்றுமொழி  என்பது  கூடிய  வரையில்  குழந்தையின்  தாய்மிழியிலேயே  இருத்தல்.

8.  குழந்தை  அச்சமின்றியும்  மன  உளைச்சல்  இன்றியும்  பதட்டமின்றியும்  பயில  செய்தல்,  குழந்தைத்  தன்  கருத்துகளைச்  சுதந்திரமாக  வெளிப்படுத்த  உதவுதல்.

9.  குழந்தையின்  அறிவு,  புரிதல்  மற்றும்  அதனை  செயல்படுத்தும்  திறன்  ஆகியவற்றை  விரிவாகவும்  தொடர்ச்சியாகவும்  மதிப்பிடுதல்.

30.  தேர்வு  மற்றும்  படிப்பை  முடிப்பதற்கான  சான்றிதழ்

1.  தொடக்கக்  கல்வியை  முடிக்கும்  வரையில்  எந்தவொரு   குழந்தையும்  எந்தவொரு  குழந்தையும்  எந்தவொரு  வாரிய (போர்டு)  தேர்வையும்  எழுதி  தேர்ச்சி  அடைய  வேண்டிய  அவசியமில்லை.

2.  தொடக்கக்  கல்வியை  முடிக்கிற  அனைத்துக்  குழந்தைக்கும்  சான்றிதழ்  வழங்கப்படும்.

அத்தியாயம் - 6

குழந்தை  உரிமைப்  பாதுகாப்பு

31.  குழந்தையின்  கல்வி  உரிமையைக்  கண்காணித்தல்

1.  தேசிய  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையம்  அல்லது  பிரிவு  17ன்  கீழ்  உருவாக்கப்படும்  மாநில  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையம்  அவைகளுக்கு  நிர்ணயிக்கப்பட்ட  பணிகளோடு  பின்வரும்  பணிகளையும்  மேற்கொள்ளும்.

அ.  இந்தச்  சட்டத்தால்  அல்லது  இந்த  சட்டத்தின்  கீழ்  வழங்கப்பட்ட  பாதுகாப்பு  அம்சங்களைப்  பரிசீலித்தல்,  மறு  ஆய்வு  செய்தல்,  அவற்றைப்  பயன்  தரும்  வகையில்  செயல்படுத்துவதற்கான  நடவடிக்கைகளைப்  பரிந்துரைத்தல்.

ஆ & இ.  புகாரின்  அடிப்படையில்  உரிய  நடவடிக்கை  எடுத்தல்.

2.  குழந்தையின்  இலவச  கட்டாயக்  கல்வி  தொடர்பான  எந்தவொரு  பிரச்சனையும்  விசாரிக்கிற  மேற்படி  ஆணையங்களுக்குக்  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  அணையங்கள்  சட்டத்தின்  பிரிவு  14,  24  ஆகியவற்றின்  கீழ்  அவற்றுக்கு  வழங்கப்பட்டுள்ள  அதே  அதிகாரங்கள்  இருக்கும்.

3.  ஒரு  மாநிலத்தில்  மாநில  குழந்தைகள்  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையம்  அமைக்கப்படாத  நிலையில்,  உரிய  மாநில  அரசானது  வரையறுக்கப்பட்டுள்ள  செயல்பாடுகளை  மேற்கொள்ளும்  நோக்கத்திற்காக  வகுத்துரைக்கப்படும்  நடைமுறைகள்  மற்றும்  நிபந்தனைகளுக்கு உட்பட்டு  ஒரு  ஆணையத்தை  அமைக்க  வேண்டும்.

32.  குறை  தீர்ப்பு

1.  இந்தச்  சட்டத்தின்  கீழ்  ஒரு  குழந்தையின்  உரிமை  தொடர்பாக  எவருக்கேனும்  ஏதேனும்  குறை  இருக்குமானால்  அவர்  அதனை  அதிகார  எல்லைக்குட்பட்ட  உள்ளாட்சி  நிர்வாகத்திற்கு  எழுத்துப்பூர்வமான  புகாராக  அளிக்கலாம்.

2.  இந்தப்  புகாரைப்  பெற்றுக்  கொண்டபின்,  உள்ளாட்சி  நிர்வாகமானது,  சம்பந்தப்பட்டவர்  தரப்பு  வாதத்தைக்  கேட்பதற்கு  நியாயமான  வாய்ப்பு  வழங்கப்பட்ட  பின்பு  மூன்று  மாத  காலங்களுக்குள்  இதுகுறித்து  முடிவு  செய்யும்.

3.  உள்ளாட்சி  நிர்வாகத்தின்  முடிவால்  பாதிக்கப்படக்  கூடிய  எந்தவொரு  நபரும்  மாநில  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையத்திற்கு  மேல்  முறையீடு  செய்யலாம்.

4.  மேல்  முறையீடு  தொடர்பாக  மாநில  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையம்  அல்லது  ஏனைய  நிர்வாக  அமைப்புகள்  உரிய  முடிவினை  எடுக்கும்.

33.  தேசிய  ஆலோசனைக்  குழு  அமைத்தல்

1.  தொடக்கக்   கல்வித்  துறையிலும்  குழந்தை  மேம்பாட்டிலும்  அறிவும்  அனுபவமும்  உள்ள  நபர்களைத்  தெரிவுச்  செய்து  ஒரு  தேசிய  ஆலோசனைக்  குழுவை  அமைக்க  வேண்டும்.  இவர்கள்  எண்ணிக்கை  15 பேர்களுக்கு  மிகாமல்  இருக்க  வேண்டும்.

2.  சட்டத்தின்  விதிகளைப்  பயன்  விளைவிக்கும்  வகையில்  செயல்படுத்துவதற்கான  ஆலோசனைகளை  மத்திய  அரசாங்கத்திற்கு  வழங்குவதே  இக்குழுவின்  செயற்பாடாகும்.

3.  தேசிய  ஆலோசனைக்  குழு  உறுப்பினர்கள்  நியமனம்,  படிகள்  மற்றும்  இதர  நடைமுறைகள்  மற்றும்  நிபந்தனைகள்  ஆகியவை  வகுத்துரைக்கப்படும்  வகையில்  முடிவு  செய்யப்படும்.

34.  மாநில  ஆலோசனைக்  குழு

1.  மாநில  அரசு,  குழந்தை  மேம்பாட்டிலும்  அறிவும்  நடைமுறை  அனுபவம்  உள்ள   எண்ணிக்கையில்  15 பேர்  மிகாத  உறுப்பினர்களைக்  கொண்ட  ஒரு  மாநில  ஆலோசனைக்  குழுவை  அமைக்க  வேண்டும்.

2.  கல்வி  உரிமைச்  சட்டத்தின்  விதிகள்  முறையாக  செயற்படுத்துவதற்கான  ஆலோசனைகளை  மாநில  அரசுக்கு  வழங்குவதே  மாநில  ஆலோசனைக்  குழுவின்  செயற்பாடாகும்.

3.  இக்குழு  உறுப்பினர்களின்  நியமனம்,  படிகள்  மற்றும்  இதர  நடைமுறைகள்,   நிபந்தனைகள்  ஆகியவை  ஏற்கனவே  விதிக்கப்பட்ட  வகையில்  முடிவுச்  செய்யப்படும்.

அத்தியாயம் - 7

இதர  அம்சங்கள்

35.  ஆணைகள்  வெளியிடும்  அதிகாரம்

இந்தச்  சட்ட  விதிகளைச்  செயல்படுத்தும்  நோக்கத்திற்காக

1.  உரிய  அரசுகளுக்கு,  உள்ளாட்சி  அமைப்பிர்கு  உரிய   வழிகாட்டுதல்களை  மத்திய  அரசு  வழங்கலாம்.

2.  உள்ளாட்சி  நிர்வாகத்திற்கோ  அல்லது   பள்ளி  நிர்வாக  குழுவிற்கோ  உரிய  வழிகாட்டுதல்களையும்  ஆணைகளையும்  உரிய  அரசுகள்  வழங்கலாம்.

3  பள்ளி  நிர்வாக  குழுவிற்கு  உரிய  வழிகாட்டுதல்களையும்  ஆணைகளையும்  உள்ளாட்சி  அமைப்புகள்  வழங்கலாம்.

36.  வழக்கு  தொடுப்பதற்கான  முன்  அனுமதி

உரிய  அரசாங்கத்தால்  அதிகாரப்பூர்வ  அறிவிக்கையின்படி  அதன்  சார்பில்   செயல்பட  அதிகாரம்  அளிக்கப்பட்ட  ஒரு  அதிகாரியின்  முன்  அனுமதி  பெறாமல்  தண்டனைக்குரிய  எந்தவொரு  குற்றத்திற்காகவும்  வழக்கு  நடவடிக்கைகள்   மேற்கொள்ளப்  படமாட்டாது.

37.  நல்லெண்ணத்துடன்  எடுக்கப்படும்  நடவடிக்கைக்குப் பாதுகாப்பு

இந்தச்  சட்டத்தை  அல்லது  சட்ட  விதிகளைச்  செயல்படுத்தும்  நோக்கத்திற்காக  நல்ல  எண்ணத்துடன்  செய்யப்படுகிற  அல்லது  நல்ல  எண்ணத்துடன்  செய்வதற்கு  உத்தேசிக்கப்பட்ட  செயல்பாடுகள்  தொடர்பாக  மத்திய  அரசாங்கம்,  மாநில  அரசாங்கம்,  தேசிய  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையம்,  மாநில  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையம்  உள்ளாட்சி  நிர்வாகம்,  பள்ளி  நிர்வாகக்  குழு  அல்லது  எந்தவொரு  வழக்கு  அல்லது  சட்டப்பூர்வ  நடவடிக்கை  மேற்கொள்ளப்பட  மாட்டாது.

38.  சட்டவிதிகள்  பிறப்பிப்பதற்கு  அரசின்  அதிகாரம்

1.  இந்தச்  சட்ட  விதிகளைச்  செயல்படுத்துவதற்காக  அரசாங்கமானது  அதிகாரப்பூர்வ  அறிவிக்கையின்  மூலம்  தேவையான  விதிகளைப்  பிறப்பிக்க  வேண்டும்.

குறிப்பாகவும்,  தற்போது  நடைமுறையில்  உள்ள  பொதுவான   அதிகார  அமைப்புகளுக்கு  முரண்படாத  வகையில்  அனைவருக்குமான  விதிகள்  உருவாக்கப்பட  வேண்டும்.

நன்றி

மனித  உரிமைக்  கல்வி  நிறுவனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக